மனிதா.... நீ யார்?

இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தாலும்
இன்னும் உன்
இதயத்தின்
இருள் நீங்கவில்லை.

பல்கலைகள் பயின்றாலும்-காசு
பணம் சேர்த்தாலும்- உன் மனதின்
பாலை வனம்
பூக்கவில்லை.

மணிக்கணக்கில்
மெனக்கட்டு
மன்னவன் செதுக்கி
மண்ணிற்கு அனுப்பிவைத்த உனக்கு

ஒன்றல்ல இரண்டல்ல
இணையற்ற ஆறறிவும்
இருந்தும் பயனென்ன?

ஜாதிமத பேதம் பார்த்து
ஜந்து போல
வாழத்தான்
ஜம்புலனும் ஆறறிவும்
வரம்
வாங்கி
வந்தாயோ?

வெள்ளையர்கள்
பேதம்பார்த்தால்
பொங்கி எழும் நீ மட்டும்
உன் இனத்தில்
பேதம் பார்த்து
உணர்வுகளை நசுக்கலாமா?

பண்டைக்கால சுயநலத்தால்
பிறந்ததுதான் ஜாதி மதம்
பகுத்தறிவு
படைத்த நீ அதை இன்னும்
பற்றி தொங்கலாமா?

பெரும்பேச்சு பேசினாலும்
பவுடர் பூச்சு பூசினாலும்
அமிர்தம்அல்ல
அழுக்கால்
ஆனதுதான் உன் உடம்பு

செங்குருதி,வெண்குருதி என்று
இயற்கை
பேதம் பார்க்கவில்லை
செருக்கோடு நீ மட்டுமேன்
பேதை போல் புலம்புகின்றாய்?

நான் பெரிதா ,நீ பெரிதா என்று
அடித்து தின்பது மிருக இயல்பு
மனிதனில் மனிதத்தை
மட்டும் மதிக்காமல்-நீ
மிதிப்பது சரி தானா?

இறந்தபின்பு இவ்வுலகில் - உன்
சாம்பல் கூட
மிஞ்சாது
இருக்கும் போதாவது - உன்
மனிதத்தை
எஞ்சவை

மனிதனுக்கு சிறந்தது
மனிதம் தான்
அது இல்லாதவன் பெயர்
மிருகம் தான்

எனவே ....
மனிதா ....
நீ யார் ...?

நீயே முடிவு செய்!!!!!

முழு மூளைச் செயல்பாடுடன் திகழ வழிகள்!



சின்னக் குழந்தைகளின் மூளை அலைகள் தீட்டா நிலையிலும், முதியவர்களின் மூளை அலைகள் பீட்டா நிலையிலும் உள்ளது என்பதை முந்திய பாராக்களில் படித்த போது தீட்டா, பீட்டா நிலை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைப் புரிந்து கொண்டால் மூளை பற்றிய பல முக்கிய விஷயங்கள் நமக்குப் புலப்படும்.

நமது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது.

மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.

அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.

(தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.)

மூன்றாவது வழி : எதிர்காலத்திற்குச் செல்லுங்கள்

உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

பத்து வருடம் கடந்த இப்போதைய புதிய சூழ்நிலையில் உங்களது பிரச்சினை மிகவும் பழையது. அதை விருப்பத்துடன் நினைத்துப் பாருங்கள். அதைக் கடந்து வந்து பத்து வருடம் ஆகி விட்டதல்லாவா? அதை எப்படித் தீர்த்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை மிக்க ஓய்வான நிலையில் அல்லது தியானத்தின் போது அல்லது ஹிப்நாடிஸ நிலையில் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களது இன்றைய பிரச்சினை தீர வழி கிடைக்கும்!

நான்காவது வழி: உரக்கச் சொல்லுங்கள்

இந்த வழி புதிய மூளை தொடர்புகளையும் நெட்வொர்க்கையும் செயல்பட வைக்கும். பார்வையை விரிவுபடுத்தும். படைப்பாற்றலை மேம்படுத்தும்.

ஜெர்மானிய கவிஞரும் எழுத்தாளருமான கதே உரக்கப் படிப்பதன் மூலம் எண்ணப் பொறிகளைப் பெறுவது வழக்கமாம். தன்னுடைய மனக் கற்பனையில் தோன்றிய ஒரு நண்பருடன் அவர் உரக்கப் பேசுவாராம். தன்னுடைய கதையின் கரு, அதில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உரக்கச் சொல்வாராம். இதுவே ஆழ்ந்த அறிவையும் சிறந்த கற்பனையையும் தனக்குத் தந்ததாக அவர் நம்பினார். இந்தக் கற்பனை யதார்த்தத்தையும் அவரது எழுத்துக்களில் புகுத்தியது.

தமிழனுக்கு பெருமை சேர்த்து தந்த A.R. ரஃமான்


இந்தியாவில் பிறந்து,சிறு வயதிலிருந்தே keyboard இசையை கற்று,1992ம் ஆண்டில் தமிழில்
"ரோஜா" படத்தில் முதல் முதலாக தனது இசைப்பயணத்தை தொடக்கி வைத்தது மட்டுமல்லாது
தனது முதல் படத்திலேயே உலகுவாழ் தமிழ் மக்களின் மனதிலே இசையால் குடிகொண்டார்.
"ரோஜா" படத்தில் "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலை இசையமைத்ததிலிருந்தே மக்கள் அனைவரின் மனதிலும்
பெரிய பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும்
பெரும் வெற்றியை குவித்து கொண்டே இருந்தன.இவரின் பாடல்களை உயர்ந்தது இது,தாழ்ந்தது என்று தரம் பிரிக்கவே முடியாது.
ஓவ்வொரு பாடல்களும் மனதுக்கும்,செவுக்கும் இனிமையை தந்தது மட்டுமல்லாது,பாடும்போது கற்கண்டு போன்று நாவுக்கும் ருசியை தந்தது.
இவர் ஒரு பொழுதும் தனது திறமையை ஒப்பு கொண்டதில்லை.எப்பொழுது பெரும் வெற்றியை அடையும்போதும் இவர் சொல்லும்
ஒரே வார்த்தை "எல்லாப்புகழும் இறைவனுக்கே".
இவரின் தனித்திறமையை ஒரு பக்கம் வைத்து விட்டு,இவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பார்த்தால்......சொல்லவே வேண்டாம்...அவ்வளவு தன்னடக்கம்....அவ்வளவு மரியாதை பெரியோர்களிடத்தில்...
இந்த உலகத்தில் எவ்வளவோ பேர் ஒரு நாள் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து ஒரு படி மேலே போய் விட்டாலே யாரையுமே மதிக்க மாட்டார்கள்,ஏன் தங்களுக்கு அந்த முன்னேற்றத்து கை கொடுத்தவனை
கூட மறந்து விடுவார்கள்.அதற்குப்பிறகு அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களுக்கு கீழ் இருப்பவர்கள் எல்லாம் தங்களது பாதணிகளாகவே நினைப்பார்கள்.
ஆனால் ரஃமான், அவர் எவ்வளவோ சாதனைகளை எட்டியபோதும் மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற அனைவரையும் மதித்து கொண்டே இருக்கிறார்,தானும் சாதாரண ஒரு மனிதன் என்று தனது அனைத்து செயல்களிலும் நிரூபித்து கொண்டே இருக்கிறார்.
அந்த தன்னடக்கம்தான் இன்று அவரை OSCAR வரைக்கும் கொண்டு நிறுத்தி விட்டது.அமெரிக்கா சென்று "slumdog millionaire" என்ற படத்தில் இசையமைத்தமைக்காக இவருக்கு இரண்டு Awards கிடைக்கப்பெற்றது.
அமெரிக்கா சென்று OSCAR வாங்கிய முதல் தமிழன் என்ற பெருமையை தனது குடும்பத்துக்கு மட்டுமல்லாது,உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்குமே எடுத்து கொடுத்து இருக்கிறார்.
"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்பதை தனது வெற்றிகளின் மூலம் எடுத்து காட்டிவிட்டார்.
வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும் என்ற ஆசையை அல்லது வெறியை எல்லார் மனதிலும் ஏற்படுத்தி விட்டார்.

சாதிமத பேதம் வேண்டாம்!















கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை ,செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை என்றும் மான்புடன் வாழ்வோமடா.
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதந்த பூனை வை பேருக்கொரு நிறம் கண்டீர்
சாம்பல் நிறமொரு குட்டி,கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்று இதில் ஏற்றம் ஏதும் சொல்லலாமோ?
என்பது பாரதியார் பாடலாகும்.
நீங்கள் எப்படி பட்டவர்?யாருடனும் பழகமுன் அவர்கள் என்ன சாதி என்று பார்த்து பழகுபவரா? இல்லை,சாதி தெரியாமல் பழகிவிட்டோம் என்று அறிந்து அவர்கள் மனதை புண்படுத்தும் வழியில் இறங்குகின்றீர்களா?
இனி அவைகள் வேண்டாமே!
சாதி ஆண்டவானால் உருவாக்கப்பட்டதில்லை,அது மனிதனால் மனிதனுக்கு அவன் செய்யும் தொழில்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புனைப்பெயர்.பிராமணர்,வெள்ளாளர்,கொல்லர்,பறையர் என்று பலவகை.
ஒருவன் தன்னால் இயன்ற.தனக்கு பிடித்த ஒன்றை செய்தால்தானே அவனால் அதில் பாரிய வெற்றி காண முடியும்.அதை தேர்ந்தெடுத்து அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் செய்தார்கள்.அந்த தொழில் அடுத்த சந்ததியினருக்கு அவர்களின் பெற்றோரால் கற்பிக்கப்படுகிறது.இதில் சில பிள்ளைகள் வேறு தொழிகளில் நாட்டம் கொண்டால் அவர்கள் வேறு தொழில்களை செய்வதற்கான சந்தர்ப்பம் அங்கே உருவாகின்றது.ஆனால், சமூகம் அவனை அப்போது கூட அவன் பரம்பரை செய்து வந்த தொழிலை வைத்தே சாதியை வகுக்கிறது.
கீழ்ச்சாதியை சேர்ந்தவர்களுடன் மேல் சாதியை சேர்ந்தவர்கள் சேருவது இல்லை,அவர்களோடு திருமண ஒப்பந்தம் வைப்பதில்லை,அவர்களை சுபகாரியங்களுக்கு அழைப்பதில்லை,அப்படி அழைத்தாலும் அவர்களை சபையில் வைத்து சாப்பாடு கொடுக்காது-ஒதுக்குப்புறத்தில் ஓட்டை சிறட்டையில் தண்ணீரும்,உடைந்த பாத்திரத்தில் உணவும்.அவர்கள் மனிதர் இல்லையா?என்ன நாயா?அவர்களும் உங்களைப்போல ஆறறிவு படைத்தவர்கள்தானே.
காதல் என்பது இரண்டு மனதுகளின் சேர்க்கை,அந்த காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.இவை அனைத்துமே பொய்.காதலிக்கமுன் கூட சாதியை கேட்டுத்தான் காதலிக்கிறது இந்த சமூகம்.
அவனுக்கும் மனது,உணர்ச்சி என்று ஒன்று இருக்குத்தானே?
இது எவ்வளவு சகோதரர்களின் மனதில் பிளவுகளை ஏற்படுத்துகின்றது.ஒரே இன,ஒரே நாட்டு மக்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
சிந்தியுங்கள்.நீங்களாவது வளர்ந்து வரும் உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூறி இந்த சாதி என்ற நஞ்சை ஒவ்வொரு மனிதனின் உடலிலும்,உள்ளங்களும் இருந்து அகற்றி,நடந்து கொண்டிருக்கின்ற இன்றைய உலகத்திற்கும்,பிறக்கப்போகும் நாளைய உலகத்திற்கும் நல்ல வழி அமைத்து,நம் சகோதரங்கள் அனைத்தும் ஒன்றாக கை கோர்த்து உலா வர செய்யுங்கள்.